இந்த காரக்குழம்பை ஒரு நாள் மதிய உணவாக ஹோட்டலில் சாப்பிடும் போது சுவைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பின் வீட்டில் வந்து செய்து பார்த்தேன்.
இந்த காரக்குழம்புக்கு மசாலா பொருட்கள் வறுக்கும் போது பதமாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல் குறிப்பிட்டள்ள அளவுக்கு மேல் பொருட்கள் சேர்க்க வேண்டாம். ஏனென்றால் குழம்பு கெட்டியாகிவிடும். இந்த குழம்பு தண்ணியாகவும் இருக்கக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இதில் சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் வைத்து செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- 10 சின்ன வெங்காயம்
- 7 பூண்டு பற்கள்
- 1 தக்காளி
- 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல்
- 2 காய்ந்த மிளகாய்
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- சிறிது கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 7 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 1 டேபிள் கடலைப்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 6 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 6 காய்ந்த மிளகாய்
செய்முறை
- புளியை கொதிக்கும் நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். பின் 1.5 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் தனியா சேர்த்து லேசாக வறுக்கவும். பின் சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- பின் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி அவை நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். வறுத்த பொருட்கள் அதன் சூட்டிலேயே இருந்து ஆறவிடவும். பின் சிறிய மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
- இப்போது மெதுவாக புளிக்கரைசலை சேர்க்கவும்.
- புளிக்கரைசலை நன்கு கலந்து விடவும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் அரைத்த விழுதை சேர்த்து மேலும் தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொதிக்க விடவும்.
- வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும் மிளகாய் வற்றல் மற்றும் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும். 3 மணி நேரத்திற்கு பின் சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Karakuzhambu recipe with step by step photos
Comments
Post a Comment