வணக்கம்,
எனது பெயர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன். இந்த வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையல் கலையும் ஒன்று. உணவு என்பது வாழும் ஜீவராசிகளுக்கு ஆதாரம். சமையல் கலையில் முழு விருப்பத்துடன் ஈடுபட்டால் சாதாரண பொருட்கள்களைக் கொண்டு சமைக்கும் உணவும் கூட அமிர்தமாக விளங்கும் என்பது என்னுடைய எண்ணம். எனக்கு சிறு வயதிலிலேயே சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
நான் எதை புதிதாக சமைத்து பார்க்கும் போது என் அம்மா எனக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். அதுவும் எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. என் அப்பா நான் எதை செய்தாலும் பாராட்டி ருசித்து மகிழ்வார். அந்த பாராட்டு எனக்கு மேலும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. எனது தங்கை நான் புதிதாக செய்யும் உணவுகளை ருசித்து மிகவும் துல்லியமாக அவற்றில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக்காட்டுவாள்.
2003ஆம் ஆண்டில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரிகளுக்கு இடையே நடந்த சமையல் போட்டியில் தேங்காய் பராத்தா செய்து காண்பித்து அதன் செய்முறை விளக்கத்தையும் கூறி வந்தேன். நடுவர் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் நாகேஷிடம் பரிசு கிடைத்ததா என்று கேட்பது போல் என் அப்பா என்னிடம் கேட்டார். உதை ஒன்று தான் கிடைக்கவில்லை என்று நாகேஷ் சொன்ன மாதிரி நானும் சொல்லும் போது நடுவர் குழுவினரால் என் பெயர் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் சென்னையில் இல்லதரிகளுக்கு நடந்த சமையல் போட்டியில் கலந்து கொண்டு Chef. Dr. தாமோதரன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு Kitchen Queen of Chennai என்ற பரிசை பெற்றேன். இது தான் என்னுடைய விருந்தோம்பல்.காம் (www.virundhombal.com) என்ற வலைப்பூ (blog) ஆரம்பிக்க காரணமாக அமைந்தது. இந்த வலைப்பூவில் திறம்பட குறிப்புகள் போஸ்ட் செய்வதற்கு என் கணவர் அவ்வப்போது ஊக்குவித்து வருகிறார். எனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கித் தருவதோடு புதுமையாக செய்வதற்கு உதவுவார். என் மகன் சிவா என் வலைப்பூவிற்கு first & best critic. இளம் வயதினர் சமையல் செய்து பழகும் போது ஒரு குழந்தைக்கு அருகில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் போது இருக்கும் தன்மையைப் போல குறிப்புகளைப் பார்த்து எளிதாக புரிந்து சரியாக செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டெப் பை ஸ்டெப் படங்களும், விளக்கமும் வலைப்பூவில் பதிவு செய்கிறேன். அதற்கு நிறைய வரவேற்புப்பும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனது அம்மாவின் உதவியோடு இந்த வலைப்பூவில்தமிழில் எனது குறிப்புகளை பதிவு செய்து வருகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் வெளியிடுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. அஞ்சல் வழிக் கல்வியில் நீச்சல் கற்றுக் கொள்வது மற்றும் சைக்கிள் கற்றுக் கொள்வது போல் இல்லாமல் உலகில் பலதரப்பட்ட மக்களும் சமையல் கலையை நன்கு புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட உதவுவதே என்னுடைய வலைப்பூவின் நோக்கம்.
என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. திருநெல்வேலியில் உள்ள சைவ சமையல் தனித்தன்மை வாய்ந்ததாகும். திருநெல்வேலியை பூர்விகமாகக் கொண்ட என் ஆச்சி எனக்கு நிறைய குறிப்புகளை கற்றுத் தருகிறார்கள். என் தாத்தா தமிழர்களின் விருந்து உபசரிக்கும் பண்பை சுட்டிக் காட்டும் பொருட்டு விருந்தோம்பல் என்ற பெயரை வலைப்பூவிற்கு பரிந்துரைத்தார்கள். என் சகோதரன் கனகசபாபதி இந்த வலைப்பூவிற்கு தேவையான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு உதவி செய்து மற்றும் ஆலோசனைகள் கொடுத்து வருகிறார். இவர்கள் அனைவரும் அளிக்கின்ற உத்வேகம்தான் எனக்கு மேலும் மேலும் புதுமுயற்சிகள் செய்ய தூண்டுகோலாக இருக்கின்றது.
Comments
Post a Comment