கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- 2 கப் புழுங்கல் அரிசி
- 1/2 கப் துவரம்பருப்பு
- பெரிய எலுமிச்சை அளவு புளி
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 10 சின்ன வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
காய்கறிகள்
- 2 கேரட்
- 10 பீன்ஸ்
- 10 கொத்தவரங்காய்
- 2 முருங்கைக்காய்
- 7 கத்தரிக்காய்
- 1 வாழைக்காய்
- 1 உருளைக்கிழங்கு
- சிறிதளவு மாங்காய் துண்டுகள்
- 1 கப் முருங்கைக்கீரை இலைகள்
அரைக்க
- 1 கப் தேங்காய் துருவல்
- 20 காய்ந்த மிளகாய்
- 15 சின்ன வெங்காயம்
- 10 பூண்டு பற்கள்
- 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
தாளிக்க
- 1/2 கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 3 வடகம்
- 20 கறிவேப்பிலை
- 1/4 கப் நல்லெண்ணெய்
- 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் புளியை சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், கொத்தவரங்காயை நீளமாக நறுக்கவும். வாழைக்காய் மற்றும் கத்தரிக்காயை நீளமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோலுரித்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய பிரஷர் குக்கரில் ஊறவைத்த துவரம்பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
- பருப்பு பாதி வெந்ததும் நறுக்கிய பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காய் சேர்த்து வேகவிடவும்.
- பீன்ஸ் லேசாக வெந்ததும் நறுக்கிய முருங்கைக்காய், உருளைக்கிழங்கு மற்றும் கேரட் சேர்த்து வேகவிடவும். அவை சிறிது நிறம் மாறியதும் நறுக்கிய வாழைக்காய் மற்றும் கத்தரிக்காயை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- காய்கறிகள் வேகும் போது புளியை 1.5 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது காய்கறிகள் பாதி வெந்ததும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அரிசி வேகும் போது அரைத்த விழுதை புளிக்கரைச்சலோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் மாங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இப்போது இந்த கலவையை மெதுவாக குக்கரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை லேசாக வதக்கி குக்கரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் அதே வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- குக்கரை மூடி வைத்து மிதமான சூட்டில் 1 அல்லது 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- பின் குக்கரை திறந்து தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
குறிப்பு
- பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காய் வேக சிறிது நேரம் ஆகும். ஆதலால் முதலில் சேர்த்து சிறிது நிறம் மாறியதும் மற்ற காய்கறிகளை சேர்க்கவும். வாழைக்காய் மற்றும் கத்தரிக்காய் எளிதாக வெந்து விடும் ஆதலால் கடைசியாக சேர்க்கிறோம்.
- ஒவ்வொரு கட்டத்திலும் தண்ணீரை கவனமாக சேர்த்துக் கொள்ளவும். காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்த்து செய்வதால் காரம், புளிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றின் அளவுகளை குறைக்க வேண்டாம்.
- வெங்காய வடகம் இல்லை என்றால் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 மணி நேரம் கழித்து பரிமாறவும். இந்த சாதம் ஆறிய பின் தான் சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மாங்காய் துண்டுகளின் வாசம் இறங்கி மணமாகவும் சுவையாகவும் இருக்கும். அப்பளம் அல்லது வத்தல் வைத்து பரிமாறவும்.
கூட்டாஞ்சோறு செய்முறையை படங்களோடு செய்முறை விளக்கம் காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment