திருநெல்வேலி புளிக்குழம்பு - இது பார்ப்பதற்கு வத்தக்குழம்பு போல் இருக்கும் ஆனால் இதன் செய்முறை வித்தியாசமாக இருக்கும். மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், தனியா, துவரம்பருப்பு, கறிவேப்பிலை முதலிய பொருட்களை நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை புளிக்கரைச்சலோடு சேர்த்து செய்யும் குழம்பு. இதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சுண்டைக்காய் வற்றல் அல்லது கத்திரிக்காய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். இதில் கடைசியாக சிறிது பொடித்த கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொள்வதை மறந்து விடாதீர்கள்.
தேவையான பொருட்கள்
- பெரிய எலுமிச்சை அளவு புளி
- 15 சின்ன வெங்காயம்
- 15 பூண்டு பற்கள்
- 1 முருங்கைக்காய் அல்லது 4 கத்தரிக்காய்
- சிறிய துண்டு கருப்பட்டி
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிது கறிவேப்பிலை
- 5 டேபிள் நல்லெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
வறுத்து அரைக்க
- 9 காய்ந்த மிளகாய்
- 3 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 டீஸ்பூன் துவரம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் தனியா
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 10 கறிவேப்பிலை
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்துக்கொள்ளவும். கத்தரிக்காயை சுத்தமாக கழுவி விட்டு காம்பை நீக்கி விட்டு நான்கு பக்கங்களிலும் லேசாக கீறிக்கொள்ளவும்.
- வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, தனியா, கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து சிறிய சட்னி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அதோடு 4 சின்ன வெங்காயம் மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை கரைந்த புளிக்கரைச்சலோடு சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெந்தயம் போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து லேசாக வதக்கி பின் கீறிய கத்தரிக்காய் அல்லது சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கத்தரிக்காய் நிறம் மாறியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை மெதுவாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- குழம்பை மூடிப்போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான குழம்பில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
குறிப்பு
இந்த குழம்பில் கத்தரிக்காய்கறிக்கு பதில் முருங்கைக்காய், சுண்டைக்காய் மற்றும் வேகவைத்த மொச்சை சேர்த்து செய்யலாம்.
இதற்கு பருப்பு, கருணைக்கிழங்கு மசியல், செள செள கூட்டு, பூசணிக்காய் கூட்டு மற்றும் முருங்கைக்கீரை பொரியல் அற்புதமான சைட் டிஷ்.
Comments
Post a Comment