Skip to main content

திருநெல்வேலி புளிக்குழம்பு - Tirunelveli Pulikuzhambu


திருநெல்வேலி புளிக்குழம்பு - இது பார்ப்பதற்கு வத்தக்குழம்பு போல் இருக்கும் ஆனால் இதன் செய்முறை வித்தியாசமாக இருக்கும். மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், தனியா, துவரம்பருப்பு, கறிவேப்பிலை முதலிய பொருட்களை நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை புளிக்கரைச்சலோடு சேர்த்து செய்யும் குழம்பு. இதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சுண்டைக்காய் வற்றல் அல்லது கத்திரிக்காய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். இதில் கடைசியாக சிறிது பொடித்த கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொள்வதை மறந்து விடாதீர்கள்.





தேவையான பொருட்கள்
  • பெரிய எலுமிச்சை அளவு புளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 15 பூண்டு பற்கள்
  • 1 முருங்கைக்காய் அல்லது 4 கத்தரிக்காய்
  • சிறிய துண்டு கருப்பட்டி
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • சிறிது கறிவேப்பிலை
  • 5 டேபிள் நல்லெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
வறுத்து அரைக்க
  • 9 காய்ந்த மிளகாய்
  • 3 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் துவரம்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 10 கறிவேப்பிலை
செய்முறை
  1. ஒரு அகலமான பாத்திரத்தில் புளியை கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்துக்கொள்ளவும். கத்தரிக்காயை சுத்தமாக கழுவி விட்டு காம்பை நீக்கி விட்டு நான்கு பக்கங்களிலும் லேசாக கீறிக்கொள்ளவும்.
  3. வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, தனியா, கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின் நன்கு ஆறவைத்து சிறிய சட்னி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அதோடு 4 சின்ன வெங்காயம் மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த விழுதை கரைந்த புளிக்கரைச்சலோடு சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெந்தயம் போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து லேசாக வதக்கி பின் கீறிய கத்தரிக்காய் அல்லது சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. கத்தரிக்காய் நிறம் மாறியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை மெதுவாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. குழம்பை மூடிப்போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  9. குழம்பு நன்கு கொதித்ததும் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  10. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான குழம்பில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
குறிப்பு
இந்த குழம்பில் கத்தரிக்காய்கறிக்கு பதில் முருங்கைக்காய், சுண்டைக்காய் மற்றும் வேகவைத்த மொச்சை சேர்த்து செய்யலாம்.
இதற்கு பருப்பு, கருணைக்கிழங்கு மசியல், செள செள கூட்டு, பூசணிக்காய் கூட்டு மற்றும் முருங்கைக்கீரை பொரியல் அற்புதமான சைட் டிஷ்.

Comments

Popular posts from this blog

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...