பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தித்திப்பான பாயாசம். இதை அடிகனமான அல்லது வெண்கலம் பாத்திரத்தில் செய்தால் நன்றாக இருக்கும். பாயசத்திற்கு பாகு வெல்லம் சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். பூஜை நிவேதனமாக இதை எளிதில் செய்திடலாம். தேங்காய்ப்பாலுக்கு பதிலாக தேங்காய்யை நைசாக அரைத்து சேர்த்து கொள்ளலாம்.
தேவையானவை பொருட்கள்
- 1/2 கப் பாசிப்பருப்பு
- 1/4 கப் ஜவ்வரிசி
- 1.25 கப் பாகு வெல்லம்
- 1 கப் தேங்காய்ப்பால்
- 10 உடைத்த முந்திரிப்பருப்பு
- 4 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பு பொன்னிறமாகும் போது ஜவ்வரிசியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- பின் தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு ஒரு சிறிய குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
- பருப்பு வேகும் போது தட்டிய வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- வெல்லம் நன்கு கரைந்ததும் அடி கனமான பாத்திரத்தில் அல்லது வெண்கலம் பானையில் வடிகெட்டி கொள்ளவும்.
- குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளவும். பின் வெல்லத்தோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பருப்பு நன்கு வெல்லத்தோடு சேர்ந்ததும் சிறிது நேரம் அடுப்பை அணைத்து விடவும்.
- பத்து நிமிடங்களுக்கு பின் தேங்காய்ப்பாலை மெதுவாக சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் குறைந்த சூட்டில் வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.
- வாணலியில் நெய் விட்டு சூடானதும் உடைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து சூடான பாயசத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Comments
Post a Comment