திருநெல்வேலியில் இதை கதம்ப பொரியல் என்று அழைப்பது வழக்கம். வாரத்தில் ஒரு நாள் இந்த பொரியலை கட்டாயம் செய்வதுண்டு. சாம்பார், ரசம் மற்றும் எந்த வகையான குழம்புகளுக்கும் சுவையாக இருக்கும். இந்த பொரியல் மீதம் இருந்தால் இரவு சுவையான கதம்ப பொரியல் ஊத்தப்பம் செய்திடுவோம்.
தேவையான பொருட்கள்- முட்டைக்கோஸ் - 250 கிராம்
- கேரட் - 1
- பீன்ஸ் - 7
- பச்சை பட்டாணி - 1/4 கப்
- தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - சிறிது
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க
- தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- சின்ன வெங்காயம் - 3
- பூண்டு - 1
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
- முட்டைக்கோஸை நன்கு கழுவி தண்டுகளை பிரித்து பொடியாக நறுக்கவும். கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
- அவை வேகும் போது தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- காய்கறி நன்கு வெந்ததும் ஒரு அகலமான பேசினில் மாற்றிக் கொள்ளவும்.
- பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்த முட்டைக்கோஸ் கேரட் கலவையை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
- கடைசியாக சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். சுவையான கதம்ப பொரியல் தயார்.
குறிப்பு
- காய்கறிகளை பதமாக சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்தால் காய்கறிகள் நிறம் மாறாமல் பார்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும். காய்கறிகள் அதிக நேரம் வேக வைத்தால் சுவை நன்றாக இருக்காது.
- முட்டைக்கோஸ் வாங்கும் போது கனமாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment