Skip to main content

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar








தேவையான பொருட்கள்
  • 1/4 கப் துவரம்பருப்பு
  • சிறிய எலுமிச்சை அளவு புளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 அல்லது 2 முருங்கைக்காய்
  • 4 வெண்டைக்காய்
  • 2 கத்திரிக்காய்
  • 5 சிறிய துண்டு மாங்காய்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
இடி சாம்பார் பொடி செய்ய
  • 7 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு
  • 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1.5 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் அரிசி
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து
  • சிறிதளவு எண்ணெய்
அரைக்க
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 4 சின்ன வெங்காயம்
  • 3 பூண்டு பற்கள்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
  1. துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அரிசி, மிளகு, கருப்பு உளுந்து மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து விடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  3. காய்கறிகளை நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  4. புளியை 2.5 கப் தண்ணீர் ஊற்றி  கரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு குழம்பு பாத்திரத்தில் புளிக்கரைசல், முருங்கைக்காய், கத்திரிக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.
  6. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதை கரைத்த புளிக்கரைச்சலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
  7. காய்கறிகள் வேகும் போது தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்த பருப்போடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. காய்கறிகள் நன்கு வெந்ததும் மாங்காய் துண்டுகள் மற்றும் பொடி செய்த சாம்பார் பொடி சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  9. பின் கலந்து வைத்துள்ள துவரம்பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். குழம்பு கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  10. சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  11. பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சிறிது கொதி வந்ததும் இறக்கவும். (குழம்பு கொதிக்கும் போது சிறிய துண்டு  வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்).
  12. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான சாம்பாரில் சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
  13. அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ் வைத்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...