வாழைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்ற பல காய்கறிகளை சேர்த்து சுவையான ஆரோக்கியமான அவியல். திருநெல்வேலியில் வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து செய்வது வழக்கம். சாம்பார், புளிக்குழம்பு மற்றும் உளுந்தம் பருப்பு சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
தேவையானவை பொருட்கள்
- வாழைக்காய் - 1
- கேரட் - 2
- பீன்ஸ் - 9
- கத்திரிக்காய் - 7
- உருளைக்கிழங்கு - 1
- முருங்கைக்காய் - 7 துண்டுகள்
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 10
- உப்பு - தேவையான அளவு
அரைக்க
- தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 4
- பூண்டு பற்கள் - 2
- பச்சை மிளகாய் - 3
- சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை
- கேரட்டை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காய்யையும் தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் காம்பை நீக்கி பாதியாக நறுக்கி மீண்டும் நடுவில் நறுக்கவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 3/4 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
- கேரட் சிறிது நிறம் மாறும் போது நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
- காய்கறிகள் வேகும் போது தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- காய்கறிகள் வெந்ததும் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து சீரகத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கும் போது தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு கலந்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சூடான அவியலில் கலந்து மூடி வைக்கவும்.
குறிப்பு
இதில் தயிருக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு ஊறவைத்த புளியை தேங்காயோடு சேர்த்து அரைக்கலாம்.
வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு, மாங்காய், புடலங்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கலாம்.
Comments
Post a Comment