இந்த தேன் குழல் அரிசியை ஊறவைத்து அரைத்து செய்வது. அரிசியை அரைத்து செய்வதினால் இதன் நிறமும் சுவையும் அற்புதமாக இருக்கும். கீழே சில முக்கிய டிப்ஸ்களோடு விளக்கம் கொடுத்துள்ளேன். நீங்களும் வீட்டிலேயே சுவையான தேன்குழலை செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- 2 கப் (500 கிராம்) இட்லி அரிசி
- 1/2 கப் உளுந்தம்பருப்பு மாவு
- 1.5 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1 டீஸ்பூன் கருப்பு எள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 3/4 கப் தண்ணீர்
- 750 மில்லி தேங்காய் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளவும். அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊறவத்துக் கொள்ளவும்.
- பின் 3 முறை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். தண்ணீரை நன்கு வடிகெட்டி கொள்ளவும்.
- பின் கிரைண்டரில் ஊறவைத்த அரிசியை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இடை இடையே டிரமின் ஓரங்களில் ஒட்டும் அரிசியை ஒதுக்கி அரைக்கும் அரிசியோடு சேர்க்கவும். தண்ணீரை கவனமாக சிறிது சிறிதாக சேர்க்கவும்.
- மாவு அரைக்கும் நேரத்தில் உளுந்தம்பருப்பு மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
- மாவு நன்கு மையாக அரைந்ததும் மெதுவாக அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும். (சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அரைக்கவும்).
- அரைத்த அரிசி மாவோடு சலித்த உளுந்தம் மாவு, கருப்பு எள், வெண்ணெய், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.
- ஒரு அகலமான வாணலியில் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும். தேன்குழல் பிழியும் ஒழக்கில் சிறிது தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளவும்.
- பிசைந்த மாவில் ஒரு பெரிய உருண்டையை எடுத்து நீளமாக உருட்டிக் கொண்டு ஒழக்கில் வைத்து மூடிக்கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் தேன்குழலை ஒரு எண்ணெய் தடவிய கரண்டியில் பிழிந்து சூடான எண்ணெயில் போடவும். இதே முறையில் 6 முதல் 8 தேன்குழல் பிழிந்து மிதமான சூட்டில் பொரிக்கவும். லேசாக நிறம் மாறியதும் திருப்பிப் போட்டு நன்கு சத்தம் நிற்கும் வரை பொரித்து எடுக்கவும்.
- காற்று புகாத சில்வர் டப்பாவில் வைக்கவும். தேன்குழல் நன்கு ஆறியதும் மூடிவைக்கவும்.
குறிப்பு
உளுந்தம்பருப்பு மாவு செய்முறை
1 கப் அரிசிக்கு 1/4 கப் உளுந்தம்பருப்பை எடுத்துக் கொள்ளவும். வாணலியை 2 நிமிடங்கள் சூடாக்கவும். பின் உளுந்தம்பருப்பை சேர்த்து கைவிடாமல் நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சில பருப்புகள் பொன்நிறமாக மாறும் போது அடுப்பை அனைத்து விடவும். அதன் சூட்டிலேயே ஆறவிடவும். பின் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும். பின் சிறிய கண் உடைய சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை மீண்டும் ஒரு முறை சலித்துக் கொள்ளவும்.
அரிசி அரைக்கும் முறை
இதற்கு உருட்டு இட்லி அரிசி நன்றாக இருக்கும். அரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் விடாமல் நைசாக அரைக்கவும்.
மாவு பிசையும் முறை
அரிசி மாவு அரைத்த பின் உளுந்தம்பருப்பு மாவு சேர்த்தபின் மாவு பிசைவதற்கு பதமாக இருக்கும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம். வெண்ணெய் சேர்ப்பதால் தேன்குழல் பொறு பொறுப்பாக இருக்கும். அதிக அளவு வெண்ணெய் சேர்க்க வேண்டாம். மாவில் உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். உப்பு அதிகமாகிவிட்டால் பொறு பொறுப்பு குறைந்துவிடும்.
மாவு தண்ணீர் பதமாக இருந்தால் பிசைந்த மாவை ஒரு வெள்ளைத்துணியில் வைத்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின் பிழியும் ஒழக்கில் வைத்து பிழியவும்.
எண்ணெயில் பொரிக்கும் முறை
தேன்குழலை பொரிப்பற்கு எப்போதும் அகலமான வாணலியை உபயோகப்படுத்தவும். தேன்குழலை பிழிந்த பின் சிறிது நேரம் கழித்து மெதுவாக திருப்பிப் போடவும். பின் ஷ்ஷ்ஷ் என்ற சத்தம் முழுவதும் நின்ற பின் எடுக்கவும்.
தேன்குழல் நன்கு ஆறியபின் சில்வர் டப்பாவில் வைத்து மூடிவைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் விரும்பி ருசிப்பார்கள். வீட்டிலேயே சுவையான தேன்குழல் தயார்.
Comments
Post a Comment